utma எழுதியவை | ஜூன் 15, 2008

தந்தை பெரியார் அறிவுரை

இந்து மதம் என்ற ஒன்று இல்லை என்று கோர்ட்டிலேயே தீர்ப்பு இருக்கிறது காந்தியாரும் இதை ஒப்புக் கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும்போது இன்னும் இந்து, இந்து என்றால் என்ன போக்கிரித்தனம்?’’

(“விடுதலை’’, 20.10.1973)

“இந்துக்கள் என்கின்ற உங்களைப் பார்த்து நீ இந்து என்கின்றாயே உன் மதம் யார் ஏற்படுத்தியது என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? எப்போது ஏற்பட்டது, என்ன ஆதாரம் என்று என்ன சொல்வீர்கள்? ஓர் ஆதாரமும் அற்றவர்களாகத் தானே உள்ளீர்கள்.’’

(“விடுதலை’’, 9.3.1973)

தொண்டு

“சமுதாயத் தொண்டு செய் பவனுக்கு மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள். நம்மை எப்படி மதிப்பார்கள் என்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதோடு அந்தப்படி நினைப்பவன் மனிதச் சமுதாயத் தொண்டுக்கு அருகனாகவே மாட்டான் என்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.’’

(“விடுதலை’’, 18.9.1971)

“தவறு செய்தவன், மோசடி செய்தவன், செய்கிறவன், பேராசைக்காரன் ஆகியவர்களுக்குத் தான் கடவுள் பக்தி, பூசை முதலியவை அதிகமாக இருப்பதைக் காண்கிறோம்.’’

(“விடுதலை’’, 24.2.1971)

“பகுத்தறிவு இன்று எல்லா மக் களுக்கும், எல்லாத்துறையிலும் செலுத்தப்படுவது சாத்தியமாக இருக்கக் கூடுமானால், மனித சமுதாயத்தில் இன்று காணப்படும் பேத நிலைகளும், போதாமை உணர்ச்சிகளும், மனக்குறைகளும், ஒப்பற்ற போட்டித் தன்மைகளும் இருப்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.’’

(“விடுதலை’’, 25.2.1951)

வாழ்வது என்பது…

“ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மை அடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமைய வேண்டும்.’’

வாழ்க்கை

“என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்துவிட்டு இந்த உலக நட வடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க் கையைப் பொருத்துங்கள்!’’

வாழ்வு

“கவலைகள், மனக் குறைகள் எல்லாம் பொதுவுடைமை ஒன்றினால்தான் நிவர்த்திக்க முடியும். பொதுவுடைமை என்று கூறுவதன் அடிப்படைத் தத்துவமே மனிதன் கவலையற்ற வாழ்வு வாழவேண்டும் என்பதுதான். சொந்த உடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வு ஆகும்.’’

நம் மக்கள்

“மனிதன் தன் அறிவைப் பயன் படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் அயோக்கியர்கள் கடவுளையும், மதத் தையும், அவதாரங்களையும், சாத்திரப் புராணங்களையும் ஏற்படுத்திப் பாழாக்கி விட்டார்கள். இதன் காரணமாகவே நம் மக்கள் காட்டு மிராண்டிகளாகவும், இழிமக்களாகவும் வாழ்கிறார்கள்.’’

சிந்திக்க….

“புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை. அது இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.’’

(“விடுதலை’’, 23.1.1968)

”ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான்
என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன்
துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை!”

மனிதனின் முதல் கடமை

“இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான்.’’

(“குடிஅரசு’’, 3.5.1936)

ஒழுக்க சீலர்

“பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்தக்காரனான கிருஷ்ணன், ஏன் கடவுள் ஆக்கப்பட்டான்? அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயணமாக்கப்பட்டு விட்டது? மகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுள் ஆக்கப்படவில்லை? அவரது பொய்யாமொழிகள் அடங்கிய குறள் ஏன் பாராயணமாக்கப்படவில்லை? இவற்றை நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா?’’

(“குடிஅரசு’’, 8.5.1948)

சம்பந்தம்

“மனிதத் தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு என்று எவன் கருதினாலும் அப்படிப்பட்டவன் முன்னுக்குப் பின் முரணாகவும், தனி உடைமைக்கார னாகவும், உயர்வு தாழ்வை ஆதரிக்கின்றவனாகவும் இருந்துதான் தீருவான்.’’
(“குடிஅரசு’’, 21.4.1945)

பலன் என்ன?

“இத்தனைக் கடவுள்கள் இருந்தும் நம்மை தாழ்ந்த ஜாதி மக்களாக, சூத்திரர்களாக, பஞ்சமர்களாகத்தானே வைத்துள்ளன? ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கடவுளுக்காக நாம் எவ்வளவு பணத்தைப் பாழ் செய்து உற்சவம் முதலியன நடத்துகிறோம். இதனால் பார்ப்பனரின் வயிறு நிறைகின்றதே ஒழிய, கீழ் ஜாதி மக்களென்னும் நமக்கு என்ன பலன்? இதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?’’

(`விடுதலை’, 24.8.1962)

பார்ப்பனர்கள்

“பாரத உற்பத்திக்கே காரணம் புத்தனை ஒழிக்கத்தான் என்று தேவி பாகவதம் கூறுகிறது. காரணம், எல்லாம் புத்தர் அறிவு கொண்டு சிந்திக்கச் சொன்னார். சாத்திரப்படி முன்னோர்கள் கூற்றுப்படி நடக்காதே அறிவு கொண்டு அலசிப் பார்த்து ஏற்றுக் கொள் என்று கூறியதற்காகவே பார்ப்பனர்களால் ஒழிக்கப்பட்டார்.’’

(`விடுதலை’, 14.9.1961)

அருகதை

“அந்தணர் என்போர் அறவோர் என்று தெளிவாகக் கூறுகிறார் திருவள்ளுவர்; அதாவது மனத்துக் கண் மாசிலாத அறவோரே அந்தணர் என்று கூறியுள்ளார். இந்த விகிதப்படி பார்த்தால், இன்றுள்ள பார்ப்பனரில் ஒருத்தர்கூட அந்தணர் என்று கூறிக் கொள்ள அருகதை உடையவராகார்.’’

(`விடுதலை’, 11.2.1960)

பகுத்தறிவாளர் கடமை

“நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன், அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல் புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.’’

(“உண்மை’’ 15.9.1976)

பகுத்தறிவு

பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே, பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப் படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்.

(விடுதலை, 11.9.1953)

முயற்சி செய்யுங்கள்!

யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சியடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங் கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்.

(விடுதலை, 25.7.1968)

குறைந்துபோகும்!

“மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந் திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதியையும் ஆராயும் படிச் செய்துவிட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தேபோகும்.”

(“விடுதலை”, 16.10.1960)


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்